Friday, September 16, 2011

ஒரு தேசிய அரசியல் தலைவனை இழந்த நாள்


ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிஸின் ஸ்தாபகத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் கொல்லப்பட்டு 11வது ஆண்டு இன்றாகும் இந்த நாள் நாடுமுழுவதிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூறப்படுகின்றது.
கிழக்குமாகாணத்தின் பல இடங்களிலும் பல்வேறு நிகழ்சிகள ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் பிரதான நிகழ்ச்சி ஒன்று கல்குடாவிலும் ஏற்பாடாகியுள்ளது.
இலங்கை முஸ்லிம்களின் முடிசூடா மன்னனும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காவிய நாயகனுமான முஹம்மத் ஹுஸைன் முஹம்மத் அஷ்ரப்பின் இழப்பின் 11ஆவது ஆண்டுப் பூர்த்தி செப்டம்பர் 16, 2011 இன்று ஆகும். 1986 இல் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற பின்னர், எம்.எச்.எம். அஷ்ரப்தான் முஸ்லிம் காங்கிரஸிற்கு புதிய தொலை நோக்கையும், புதிய பாதையையும் கொடுத்தவர் ஆவார்.
15 வருடங்களாக அஷ்ரப் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் அவரின் இலட்சிய வீறும், சாதிக்கும் ஆற்றலும் காரணமாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்பல சாதனைகளைக் கண்டது. இவரது அரசியல் நிலைமைகளை சரியாக கணக்குப் போடும் திறன், அர்ப்பணிப்பு, தியாகம் , வீரம் ஒரு தேசிய அரசியல் தலைவனாக இவரை உயர்த்தியது.
இலங்கையின் அரசியல் வானில் பிரகாசமாக மின்னிகொண்டிருந்த  இந்த நட்சத்திரத்தை மர்மமான ஒரு விமான வெடிப்பு அழித்தொழித்து, இதற்கு புலிகள் பிரதான காரணமாகவும், இன்னும் பலர் இதற்கு காரணம் என்றும் இன்றும் நம்பப்படுகின்றது.
கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பகுதியில் உரக்கந்த மலைத்தொடர்மேல் இலங்கை விமானப் படையின் எம்.ஐ. 17 ரக ஹெலிக்கொப்டர் வெடித்து சிதறிய துன்ப நிகழ்வில் இவர் மரணமானார். அன்று இவருடன் சென்ற , விமான ஊழியர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தனிப்பட்ட ஊழியர்கள், அரசியல் ஆதரவாளர்கள் என 14 பேர் கொல்லப்பட்டனர்.
விமான வெடிப்பு, விபத்தா அல்லது நாச வேலையா என ஆய்வு செய்ய  புலனாய்வு நடவடிக்கை அன்று தொடங்கியது ஆனால் புலனாய்வு முடிவுகள் இன்றுவரை வெளிவரவில்லை .
இந்த நிலையில் அவரின் நினைவாக அவர் எழுதிய கவிதை ஒன்றை இங்கு பதிவு செய்கின்றோம்.
போராளிகளே புறப்படுங்கள்!
எம்.எச்.எம்.அஷ்ரப்
போராளிகளே புறப்படுங்கள்!
ஒரு துப்பாக்கியின் ரவைகளினால்
எனது இரைச்சல் அடங்கி விட்டதுக்காய்
நமது எதிரி
வென்றுவிட்டான் என்று நீ
குழம்பிவிடக் கூடாது!
அன்றுதான்
போராட்டம் எனும் நமது
இருண்ட குகைக்குள்
வெற்றிச் சூரியனின்
வெண்கதிர்கள் நுழைகின்றன
என்பதை நீ மறந்து விடவும் கூடாது!
உனது தலைவனுக்கு
ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை
நீ எப்போதும் மறந்திடாதே!
தலைவர்கள் ஒரு போதும்
மரணிப்பதில்லை என்பதனை
நான்
சொல்லித்தரவில்லையா?
என்னை அதற்காய் நீ
மன்னித்து விடுவாயாக!
நாம் அல்லாஹ்வின் பாதையில்
நடந்து வந்தவர்கள்
நீங்களெல்லாம் தொடர்ந்து அப்பாதையில்
நடக்க இருப்பவர்கள!
இந்தப் போராட்டத்தில்
சூடுண்டாலும், வெட்டுண்டாலும்
சுகமெல்லாம் ஒன்றேதான்!
நமது போராளிகள்
யாரும் மரணிக்கப்போவதில்லை!
போராளிகளே புறப்படுங்கள்
ஓரத்தில் நின்று கொண்டு
ஓய்வேடுக்க நேரமில்லை!
இந்த மையத்தைக் குளிப்பாட்டுவதில்
உங்கள் நேரத்தை வீனாக்க வேண்டாம்!
தண்ணீரும் தேவையில்லை
பன்னீரும் தேவையில்லை!
உங்கள் தலைவனின் உடலில்
இரத்தத்தால் சந்தனம் பூசப்பட்டுள்ளதா?
அது அவனின் மண்ணறையில்
சதா மணம் வீச வேண்டுமெனில்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்!
இந்த மையித்தைக் குளிப்பாட்டுவதால்
கடைசி நேரத்தில் தலைமைத்துவக்
கட்டுப்பாட்டை மீறாதீர்கள்!
கண்ணீர் அஞ்சலிகள் போதும்
கவலைகளை கொஞ்சம் மறந்து தூக்குங்கள்!
இரத்தத்தால் தோய்ந்திருக்கும்
எனது ஆடைகளை எடுத்து வீசாதீர்கள்!
வேண்டுமெனில் எனது “இஹ்ராம்”
துண்டுகளை
அவற்றுக்கு மேலே எடுத்துப் போடுங்கள்!
எனது உடலில் இருந்து பொசிந்து வரும்
இரத்தச் சொட்டுக்கள், அவற்றை தழுவும்
பசியுடன் இருப்பதைப் பாருங்கள்!
எனது மூக்குக்குள்ளும்
எனது காதுகளுக்குள்ளும்
பஞ்சுத் துண்டங்களை வைத்தென் முகத்
தோற்றத்தை
பழுதாக்கி விடாதீர்கள்!
சில வேளைகளில் உங்களை நான்
சுவாசிக்காமலும்
சில வேளைகளில் உங்களை நான்
கேட்காமலும்
சில வேளைகளில் உங்களை நான்
பேசாமலும் இருந்திருக்கின்றேன்!
குருடர்களாகவும்
செவிடர்களாகவும்
ஊமையர்களாகவும் இல்லாதவர்களால்
இப்போராட்டத்தில் நின்று பிடிக்க முடியாது!
கபுறுக் குழிக்குள்ளாவது
என்னை சுவாசிக்க அனுமதியுங்கள்!
ஹ_ர்லீன்களின் மெல்லிசைகளை
கேட்டு ரசிக்கும் பாக்கியத்தைத் தாருங்கள்!
தூக்குங்கள் இந்த மையித்தை இன்னும்
சுணக்கவும் தேவையில்லை.
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்!
ஓரத்தில் நின்றுகொண்டு
ஓயாமல் தர்க்கம் செய்யும்
வீரத்திற்கு வையுங்கள் முற்றுப் புள்ளி!
கருத்து வேறுபாடென்னும்
கறையான்கள் வந்துங்கள்
புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும்
புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்!
வேகத்தைக் குறைக்காமல்
வெற்றியுடன் முன்னே செல்லுங்கள்!
ஆலமரமாய்
ஆயிரம் விழுதுகளுடன் நமது மரம்
வாழவேண்டும் – அதை
வாழ்விற்கப் புறப்படுங்கள்!
எனது பணி இனிது முடிந்தது
உங்கள் பணிகளைச் செய்வதற்காய்ப்
புறப்படுங்கள்!
அவனின் நாட்டத்தை
இவனின் துப்பாக்கி ரவைகள்
பணிந்து தலைசாய்நது
நிறைவேற்றியுள்ளன.
விக்கி அழுது
வீணாக நேரத்தை ஓட்ட வேண்டாம்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்!
…………………………….
அஷ்ரப் பாராளுமன்றத்தில் ஒரு நாள்
இது youtube இல் கண்டுகொண்ட ஒரு பதிவு

No comments:

Post a Comment